செய்திகள்
கேஎஸ் அழகிரி

அஞ்சலிக்காக எச்.வசந்தகுமார் உடல் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும்- கே.எஸ்.அழகிரி

Published On 2020-08-29 01:45 GMT   |   Update On 2020-08-29 01:45 GMT
எச்.வசந்தகுமாரின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வழி வந்த அவர் இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்.

கொரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்பது குறித்து கடுகளவும் அச்சம் கொள்ளாமல் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக அதே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார்.

எச்.வசந்தகுமார் அவர்களுடைய மறைவின் மூலம் தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்டது. என் உடன்பிறவா சகோதரரை நான் இழந்திருக்கிறேன். நானே மிக கடுமையான துக்கத்தில் இருக்கிறபோது யாருக்கு என்னால் என்ன ஆறுதல் கூறமுடியும்!

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதோடு, கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

எச்.வசந்தகுமாரின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக சனிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News