செய்திகள்
வசந்தகுமார் எம்.பி. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஒ.பன்னீர்செல்வம்
கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கொரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.H.வசந்தகுமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டுவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.