செய்திகள்
கோப்புப்படம்

ராமநாதபுரம் அருகே கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நர்சு பலி

Published On 2020-08-14 09:49 GMT   |   Update On 2020-08-14 09:49 GMT
அரசு ஆஸ்பத்திரி நர்சு ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென்று இறந்துபோன சம்பவம் சுகாதாரத்துறையினர் மற்றும் செவிலியர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள பாண்டியூரை சேர்ந்தவர் இளையராஜா என்பவரது மனைவி கலைச்செல்வி (வயது 39). இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் தொகுப்பூதிய அடிப்படையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த கலைச்செல்வி திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். கொரோனா சிகிச்சை முடிந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பலியான நர்சுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அரசு ஆஸ்பத்திரி நர்சு ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென்று இறந்துபோன சம்பவம் சுகாதாரத்துறையினர் மற்றும் செவிலியர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News