செய்திகள்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது 2 முறை தப்பிய கொலை வழக்கு கைதியை போலீசார் பிடித்தனர்.
கோவை:
ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் பகாடா கிராமத்தை சேர்ந்தவர் பீம்சாகர் நாயக் (வயது 30). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் கடந்த ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டது. எனவே அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை பிரிவில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கடந்த 9-ந் தேதி காலை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கழிவறைக்கு சென்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பீம்சாகர் நாயக் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து தகவல் தெரிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று கோவை அவினாசி மேம்பாலம் அருகே நின்றிருந்த பீம்சாகர் நாயக்கை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறையில் அடைக்காமல் அதே மனநல சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை கழிவறைக்கு செல்வதாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் சொல்லிவிட்டு சென்ற பீம்சாகர் நாயக் மற்றொரு வழியாக தப்பி ஓடினார். கோவை அருகே உள்ள தெக்கலூருக்கு சென்ற அவர், தான் தங்கி இருந்த அறைக்கு சென்று, அங்கிருந்தவரிடம் பணம் கேட்டு வாங்கினார்.
பின்னர் அவர் போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிப்பதை தடுக்க முடித்திருத்தம் செய்து, உடையை மாற்றிக்கொண்டார். அத்துடன் அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசா தப்பி செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர், அங்கு சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, தெக்கலூரில் சுற்றிய பீம்சாகர் நாயக்கை கைது செய்து அரசு ஆஸ்பத்திரி மனநல சிகிச் சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
மேலும் அவர் தப்பிச்செல்லாமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.