செய்திகள்
மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாகர்கோவிலில் சுதந்திர தின விழா - போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

Published On 2020-08-13 09:34 GMT   |   Update On 2020-08-13 09:34 GMT
நாகர்கோவிலில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
நாகர்கோவில்:

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவும், குடியரசு தின விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நிலவுவதால் சுதந்திர தின விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் இந்த முறை கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

மேலும் விழாவில் கூட்டத்தை தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், 60 வயதை தாண்டியவர்களும் விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாமல் வந்தால் விழாவில் பங்கேற்க முடியாது. அதுமட்டும் இன்றி விழாவுக்கு வரும் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அதே சமயம் போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு ரத்து செய்யப்படவில்லை. வழக்கம் போல நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு போலீசார் அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் வழக்கத்தை விட குறைவான போலீசாரே பங்கேற்றனர். அடுத்த ஒத்திகை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதற்கிடையே விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சீரமைக்கும் பணிகளும், சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News