தமிழ்நாடு

தென் ஆப்பிரிக்காவில் நடந்த விபத்தில் குமரி மாவட்ட வாலிபர்கள் 2 பேர் பலி

Published On 2024-04-26 05:17 GMT   |   Update On 2024-04-26 08:29 GMT
  • விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை:

குமரி மாவட்ட தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின். இவருக்கு சொந்தமாக தென் ஆப்பிரிக்கா நாட்டில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலை உள்ளது. அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இரணியல் அருகே வட்டம் பகுதியை சேர்ந்த ஷைபின் (வயது 32) என்பவரும், மேலாளராக தக்கலை அருகே புங்கறை பகுதியை சேர்ந்த ஜெயசந்திர சேகர் என்ற சதீஷ் (42) என்பவரும் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஷைபின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக தென் ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள கானா என்னும் இடத்துக்கு செல்ல அப்பகுதியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவரின் சொகுசு காரில் ஷைபின், ஜெயசந்திரசேகர் உள்பட 3 பேர் சென்றனர். அப்போது டெமா என்னும் இடத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில் வேகமாக மோதினர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசந்திர சேகரும், ஷைபினும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விபத்தில் பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திரசேகர் ஆகியோரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திர சேகர் உடல்கள் நாளை (27-ந்தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் (28-ந்தேதி) அவர்களின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறந்துபோன ஷைபினுக்கு சுஷ்மி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஜெயசந்திர சேகருக்கு மினி என்ற மனைவியும், 7 வயதில் ரியான்ஸ் என்ற மகனும். 3 வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இதில் ரியானாவுக்கு தந்தை இறந்த அதே நாளில் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News