செய்திகள்
கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
திருக்கோவிலூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருப்பூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் டிரைவர், கிளனரிடம் லாரியில் உள்ள மூட்டைகள் என்ன என்று விசாரித்தனர். அதற்கு அவர்கள் நெல்மூட்டைகள் என்று கூறியுள்ளனர்.
எனினும் அவர்களது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அது ரேஷன் அரிசி மூட்டைகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்தி (வயது 32), ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த கிளனர் ரகுமாறன் (35) என்பதும், அவர்கள் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் லாரியில் 300 மூட்டைகளில் இருந்த 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர் கார்த்தி, கிளனர் ரகுமாறன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.