செய்திகள்
திருட்டு நடந்த வீட்டின் முன்பு பீரோ உடைக்கப்பட்டு இருக்கும் காட்சி.

சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

Published On 2020-08-04 08:56 GMT   |   Update On 2020-08-04 08:56 GMT
சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
சூலூர்:

சூலூர் அடுத்த பட்டணம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 34). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சரண்யா என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு 2-வது குழந்தை பிறந்ததால் தனது மாமியார் வீடான ஆலாந்துறைக்கு அவர் சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், பூட்டிக் கிடந்த அவரது வீட்டை கண்காணித்த மர்ம ஆசாமிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவை எடுத்துக்கொண்டு வெளியே வந்த ஆசாமிகள், அதில் இருந்த 13 பவுன் நகையை திருடினார்கள்.

பின்னர் அவர்கள் அந்த பீரோவில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வீசிவிட்டு அதை அங்கேயே போட்டுவிட்டு சென்றனர். நேற்று காலையில் அவருடைய வீட்டின் வெளியே பீரோ கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதுபோன்று பிரபு வீடு இருக்கும் அடுத்த தெருவில் உள்ள 2 வீடுகளிலும் திருட்டு முயற்சி நடந்து உள்ளது.

எனவே இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள். சூலூர் அருகே ஒரு வீட்டில் திருட்டு, 2 வீடுகளில் திருட முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News