செய்திகள்
அயோத்தில் செல்லும் புனித மணல், நீர்

ராமேஸ்வரம் புனித மணல், புனித தீர்த்தம் பாஜக இளைஞரணி சார்பில் அயோத்தி அனுப்பி வைப்பு

Published On 2020-08-03 13:29 GMT   |   Update On 2020-08-03 13:29 GMT
அயோத்தியில் நாளைமறுதினம் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெறும் நிலையில், ராமேஸ்வரம் புனித மணல், புனித தீர்த்தம் பாஜக இளைஞரணி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ஸ்ரீராமபிரானுக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழா நாளை மறுதினம் (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பூமி பூஜை விழாவிற்கு இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு புனித தலங்களில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் புனித மணல் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தென்னிந்தியாவின் முக்கியமான புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து புனித மணல் மற்றும் புனித தீர்த்தம் சேகரிக்கப்பட்டன. பின்னர் அங்குள்ள காஞ்சி சங்கர மடத்திலுள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் பவர் நாகேந்திரன், ராஜேஸ்வரி, மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தர முருகன், நகர தலைவர் ராமநாதன் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் சுந்தரம் வாத்தியார், ராமச்சந்திரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பூஜைக்கு பின்னர் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித மணல் மற்றும் புனித தீர்த்தத்தை கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் மற்றும் புனித மணலை, பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்திடம் வழங்கினார்கள். அவர் அவற்றை விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது பாஜக மாநில சட்ட பிரிவு தலைவர் பால்கனகராஜ், பாஜக இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், இளைஞரணி மாநில செயலாளர் ராகுல் சுரானா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News