search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Temple"

    • கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது.
    • ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.

    அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    • சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்
    • பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

    பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

    பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.

    பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஏஏ குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
    • இந்தியா தொடர்புடைய விஷயங்களில் பாகிஸ்தான் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஐ.நா.சபையில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது:

    இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடானது ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

    எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

    • 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்.
    • கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.

    குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள தாராப் என்ற இடத்தில் வாலிநாத் மகாதேவ் கோவிலை திறந்து வைத்து பிரார்த்தனை செய்த பின்னர் பொது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

    இதற்கிடையே, 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

    அயோத்தியில் இன்று, ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, எதிர்மறையாக வாழும் மக்கள் வெறுப்பின் பாதையை விட்டு வெளியேறவில்லை.

    கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.

    நாட்டில் ஒருபுறம் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர்.

    கோவை:

    கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வள்ளி கும்மி நடனம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்த நடனத்தை இப்போது பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள்.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த நடனத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள் என ஏராளமா னோர் உற்சாகத்துடன் கற்று அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக கோவில் விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வள்ளி கும்மி நடனம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வள்ளி கும்மி நடனம் ஆடுவது கவருவதாக அமைந்துள்ளது. வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மங்கை வள்ளி கும்மி நடனக்குழுவினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோவில் முன்பு தங்கள் பாரம்பரிய வள்ளி கும்மி நடனத்தை அரங்கேற்றி அங்கு திரண்டு இருந்த வடமாநில பக்தர்களை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர். ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாங்களும் இந்த கலையை கற்க விரும்புவதாக பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி மங்கை வள்ளிக்கும்மி குழுவின் தலைமை பயிற்சியாளரான பொங்கலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 477 பேருடன் ரெயில் மூலம் அயோத்தி சென்றோம். அயோத்தி ராமபிரான் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றப்பட்டது. இதனை உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் வெகுவாக கண்டு ரசித்தனர். நடனம் நிறைவு பெற்றதும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர், எங்களுக்கும் வள்ளி கும்மி கற்றுத் தாருங்கள் என்று மனம் திறந்து கேட்டனர். வள்ளிக்கும்மிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

    பண்டைய காலம் முதலே கும்மி ஆட்டம் என்பது அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்துக்கு கும்மி கொட்டுதல், அதாவது கை கொட்டுதல் என்று பொருள். இது தற்போது காலமாற்றத்துக்கு ஏற்ப மெல்ல நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், கைக்கொட்டி அடித்தல், இணையுடன் சேர்ந்து கைகளை கொட்டுதல் என்று 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது.


    கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் மாரியம்மன், முருகன் கோவில் திருவிழாக்களின்போது முளைப்பாரி எடுத்து கும்மி அடிப்பது வழக்கத்தில் உள்ளது. அதாவது முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன்பாக 6 நாளும், கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடுவோம். அப்போது பல்வேறு கருத்துக்கள் செறிந்த பாடலைப் பாடி கும்மியடித்து ஊர் மக்கள் முன்னிலையில் பண்டைய கால பழக்கவழக்கங்களை நினைவு கூறுவோம்.

    எங்களின் வள்ளி கும்மி குழுவில் பெரும்பாலும் நாட்டுப் புறப்பாடல்களும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் பாடப்படுவது உண்டு. அகநானூறு, சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் பூந்தட்டு, குலவை, தீபம், கதிர், முளைப்பாரி என கும்மியில் பல்வேறு வகைகள் உண்டு. இதற்கான இலக்கியங்களும் சாத்திரங்களில் நடைமுறையில் உள்ளன. அவற்றில் வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி போன்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கும்மி என்பது உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வு அளிக்கும் சிறந்த கலை ஆகும். வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபடுவோருக்கு மருந்து, மாத்திரை இன்றி உடலில் நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் குறைந்து உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்புகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

    வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2.5 மணி நேரம் ஆகும். கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி த்தொகை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெற விரும்புவோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
    • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடையில் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தினமும் ஒரு மணிநேரம் மட்டும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இவ்வாறு தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறினார்.

    • டெல்லியில் இருந்து தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும்.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வந்த ரெயில், புதிய பாதையில் இயக்கப்பட உள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி ரதம் இந்தியாவின் சொகுசு ரெயிலான பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து தொடங்கிய இந்த சொகுசு ரெயில் இணையற்ற விருந்தோம்பல், ஆடம்பர அறைகள், சுவாரசியமான பயணங்களுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றது. உலகளவில் முதல் 10 ஆடம்பரமான ரெயில் பயணங்களில் இதுவும் ஒன்று. இதனால் பேலஸ் ஆன் வீல்ஸ் சொகுசு ரெயில் பயணம் சுற்றுலாவுக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அரண்மனையில் இருப்பது போன்ற உணர்வை தரும்.

    இந்த நிலையில் பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயிலில் இந்தியாவில் சில புனித நகரங்கள் வழியாக 6 நாள் புனித யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    டெல்லியில் இருந்து தொடங்கி வாரணாசி பிரயாக்ராஜ் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும். ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வந்த ரெயில், புதிய பாதையில் இயக்கப்பட உள்ளது.

    புனித யாத்திரையில் ரெயிலில் பிரத்யேகமாக சைவ உணவுகளே வழங்கப்படும். மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது. மாதத்துக்கு 2 முறை புனித யாத்திரை சுற்றுலா ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக ரெயில் ரூ.7 கோடியில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. சொகுசு ரெயில் புனித யாத்திரை கட்டணம் ஒரு நபருக்கு லட்சக்கணக்கில் இருக்கும்.

    • அழைப்பு வரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.
    • லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    டெல்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு மனைவி மற்றும் குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் செல்கிறார்.

    அயோத்தி ராமர்கோவிலில் கடந்தமாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் அங்கு சென்று வருகிறார்கள். கடந்த 22 -ந்தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார்.

     


    மேலும் அவர் குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட விரும்புவதாகவும் கூறி இருந்தார். கும்பாபிஷேக விழாவுக்கு பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர். 

    கட்சி பேதங்களைக் கடந்து ஏராளமான தலைவர்களும் கூட ராமர்கோவிலுக்கு செல்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ராமர் கோவிலுக்கு சென்றார்.

    எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிலுக்கு செல்லும் பயணத்தை இன்று புறக்கணித்தனர். பா.ஜ.க., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஓ.பி. ராஜ்பார் தலைமையிலான எஸ்.பி.எஸ்.பி., ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அயோத்தி சென்றனர்.

    • ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா?
    • தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?.

    பாராளுமன்றத்தில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பகவான் ராமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், அவரால் கொல்லப்பட்ட நபர் கூறிய கடைசி வார்த்தை ஹேம் ராம்.

    இன்று நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். மோடி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதா?. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா? இந்த அரசு சொந்த மதத்தை கொண்டுள்ளதா?. இந்த அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது, நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வு குறித்த இந்தத் தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?. நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட இந்த அரசு தெரிவிக்கும் பெரிய செய்தி என்ன?" என்றார்.

    மேலும், முஸ்லிம் தலைவர்களின் படையெடுப்பு மற்றும் ஆட்சிக்குப் பிறகு, சிறுபான்மையினர் பிரிவில் இருந்து வந்த தலைவர்கள் என பா.ஜனதாவால் முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் "நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசீப்பின் செய்தி தொட்பாளரா?" என கடுமையாக தாக்கி பதில் அளித்தார்.

    • காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்தது.
    • எங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஏழைகளுக்க 4 கோடி வீடுகள் கட்டி கொடுத்தோம். நகர்ப்புற ஏழைகளுக்கு 80 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். காங்கிரஸின் வேகத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டிருந்தால், 100 வருடங்கள் ஆகியிருக்கும். ஐந்து தலைமுறையினர் இதை கடந்து சென்றிருப்பார்கள்.

    பகவான் ராமர் வீட்டிற்கு மட்டுமல்ல, இவ்வளவு பெரிய பிரமாண்ட கோவிலுக்கும் திரும்பியுள்ளார். இந்த முறை 400 இடங்களுக்கு அதிகமாக பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். மல்லிகார்ஜூன கார்கே கூட இதை கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்பதில்லை. பா.ஜனதா தனியாக 370 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்.

    விசாரணை அமைப்புகள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் அதன்மீது கோபம் கொள்கிறார்கள். 10 வருடத்திற்கு முன் நமது பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆனால், இன்று தற்போது ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் விசாரணை அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

    நீங்கள் (ஊழல் வழக்கில் சிக்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள்) ஊழல் செய்த பணத்தை நாட்டிற்கு திருப்பி தர வேண்டும். நாட்டை கொள்ளையடிக்க நான் அனுமதிக்கமாட்டேன்.

    பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாங்கள் முன்பை விட இரண்டு மடங்கு வழக்குகளை பதிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்தது. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
    • அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அயோத்திக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்தும் இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல மறு மார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    இந்த விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.

    முன்பதிவு தொடங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

    அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர நபர் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
    • மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றதும் சிரமம் இல்லாமல் அயோத்தி செல்ல ஏற்பாடு செய்யும்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்களும், பக்தர்களும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பொறுப்பாளர்கள், 6 மாவட்டங்களுக்கு ஒரு பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டு அயோத்தி செல்ல விரும்புபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் பல பகுதிகளில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.

    கோவையில் இருந்து 8, 13, 18, 23, 28 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600.

    திருப்பூரில் இருந்து 10, 15, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600 ஈரோட்டில் இருந்து 11, 16, 21 மற்றும் 26-ந் தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,400.

    சேலத்தில் இருந்து 12, 17, 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. கட்டணம் ரூ.2,300.

    மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.3,100.

    21-ந் தேதி மதுரை, 29-ந் தேதி திருநெல்வேலி, 8-ந் தேதி கன்னியாகுமரி, 15-ந் தேதி நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் கேரளா வழியாக செல்லும். நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து ரூ.3,800-ம், நாகர்கோவிலில் இருந்து ரூ.3,700-ம் கட்டணம். 

    ×