செய்திகள்
ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சங்கர் கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நோய் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில அரசியல் கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தை முன் வைத்து போராட்டம் அறிவிக்கின்றனர். இதனால் அங்கு தேவையில்லாமல் மக்கள் கூடுகிறார்கள். இது நோய் பரவலுக்கு ஒரு காரணமாகிவிடும். தற்போது கொரோனா பணியில் போலீசார் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பொதுமக்களை காக்கும் பணியில் உள்ள நிலையில் போராட்டம் குறித்தான பாதுகாப்பு பணிகளுக்கும் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும்போது அங்கு கொரோனா தொற்றால் போலீசாரும் பாதிப்புக்குள்ளாகின்ற நிலை உருவாகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி யார் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். மேலும் ஏலச்சீட்டு, தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்துபவர்களிடம் பணம் கட்டும் பொதுமக்கள் இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.