செய்திகள்
பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது - மாநில துணைத்தலைவர்
தமிழக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்று மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் தங்க வரதராஜன், மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பா.ஜ.க. கொடியை கருப்பு முருகானந்தம் ஏற்றி வைத்து வந்தே மாதரம் பாடினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களை வரவேற்று பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றார்கள். தமிழக சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. இந்து கடவுளை விமர்சிப்பது, இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது என எந்த செயலையும் தமிழகத்தில் இனி எவராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. சாதாரண குடும்ப பெண்கள் கூட கந்த சஷ்டி கவசம் அவமதிப்பு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்தகைய பெண்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.