செய்திகள்
சாத்தான்குளம் வழக்கில் 5 காவலர்களை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல்
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கில் ஐந்து காவலர்களை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டபோது அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் அவர்களை கண்மூடித்தனமாக அடித்ததால்தான் உயிரிழந்தனர். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையில் தமிழக அரசு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.
தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 10 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது. மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐயின் மனு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.