செய்திகள்
ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 14 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 14 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜெர்த்தலாவ் பகுதியை சேர்ந்த 49 வயது நபர் பாலக்கோடு பஸ் நிலைய வளாகத்தில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். அவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினரையும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினார்கள்.
மேலும் அந்த கடைக்கு வந்து சென்றவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பாலக்கோடு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. பஸ் நிலையத்திற்கு செல்லும் நுழைவுவாயில் மூடப்பட்டது.
ஓசூரில் வெங்காய வியாபாரம் செய்து வந்த தர்மபுரியை சேர்ந்த 46 வயது வியாபாரி கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 40 வயதான வியாபாரியின் மனைவி, இவர்களது 14 வயது மகள், 17 வயது மகன் மற்றும் 33 வயது உறவினர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதேபோல் ஓசூரில் இருந்து பெரியாம்பட்டிக்கு வந்த 35 வயது ஆண், ஐதராபாத்தில் இருந்து பென்னாகரம் அருகே உள்ள புதுப்பட்டிக்கு வந்த 30 வயது சிப்ஸ் கடை தொழிலாளி, பெங்களூருவில் இருந்து தடங்கம் கிராமத்திற்கு வந்த 53 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதியமான்கோட்டை அருகே உள்ள கோடியூரை சேர்ந்த 11 வயது சிறுமி, 7 வயது சிறுவன், தர்மபுரி இப்ராகிம் ரோடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுவன், சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் செவிலியர், கே.என். அள்ளியை சேர்ந்த 35 வயது ஆண் சுகாதார ஆய்வாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 14 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.