செய்திகள்
கோப்புபடம்

உளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

Published On 2020-07-11 07:52 GMT   |   Update On 2020-07-11 07:52 GMT
உளுந்தூர்பேட்டை அருகே கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் 1½ வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). கூலித்தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி (26) என்ற மனைவியும், கவிப்பிரியா(7), ரித்விகா(1½) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று பெருமாள் குளித்துவிட்டு மனைவியிடம் துண்டு கேட்டுள்ளார். உடனே ஜெயந்தி பழைய துண்டை எடுத்துக் கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெருமாள் அவரது மனைவியை ஆபாசமாக திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த ஜெயந்தி தனது 2 பெண் குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்விகா உயிரிழந்தாள். ஜெயந்தி, கவிப்பிரியாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News