செய்திகள்
குழந்தை மீட்பு

துவரங்குறிச்சியில் முட்புதரில் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்பு

Published On 2020-07-08 10:50 GMT   |   Update On 2020-07-08 10:50 GMT
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் முட்புதரில் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மருத்துவமனை பகுதியில் உள்ள முட்புதர் அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று காலை விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, முட்புதரில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைக்கேட்ட அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பெண் குழந்தை கிடந்தது. இதுபற்றி துவரங்குறிச்சி போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.உடனே துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். அப்போது, அது 10 மாத பெண் குழந்தை என்பதும், தவழ்ந்து முட்புதருக்குள் சென்றதால், குழந்தையின் கையில் முள் குத்தி கிழித்து இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை, துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர், குழந்தைக்கு போலீசார் புத்தாடை வாங்கி அணிவித்தனர். மீட்கப்பட்ட பெண் குழந்தையை பெண் போலீஸ் ஜெயலட்சுமி தான் தூக்கி வைத்திருந்தார். அந்த குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, அங்கிருந்தவர்கள் குழந்தையை தூக்கியதும் அது அழத்தொடங்கியது. இதனால் குழந்தையை அந்த பெண்போலீஸ் வாங்கியதும் அழுகையை நிறுத்தி இணக்கமாக பழகியது. இதைத்தொடர்ந்து மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா முன்னிலையில், குழந்தைகள் நலக்குழுவிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? எதற்காக முட்புதரில் வீசி சென்றார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News