search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை மீட்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
    • பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி, ராமானுஜ கூடத் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. நேற்று இரவு அதன் அருகில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து யுவராணி உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் பிறந்து சில நாட்களே ஆகி இருந்த பெண் குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.


    இதுபற்றி அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் யார்? குழந்தையை வீசி சென்றது ஏன்? கடத்திவரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குழந்தையை குப்பை தொட்டிக்குள் வீசி சென்று இருப்பதும் குழந்தை அழுத படியே சோர்ந்து உயிருக்கு போராடியபடி கிடந்து இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள்.
    • கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 26). கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்கிறார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஜன்னல்யா (4) என்ற மகள் உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி, விஜயலட்சுமி ஆகியோர் வழக்கம் போல் கடற்கரை சாலையில் நேரு சிலை அருகே பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து அவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காரைக்காலுக்கு விரைந்தனர். அப்போது குழந்தையை கடத்தி வைத்திருந்த செல்லா (42) என்ற பெண்ணை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    இதுபற்றி காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. அதன்பின் குழந்தையை கடத்தியவர்கள் காரைக்காலுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். உடனே காரைக்கால் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் நள்ளிரவு 1.10 மணிக்கு குழந்தையுடன் இறங்கிய நபர்கள், ஆட்டோ பிடித்து லெமர் வீதிக்கு வந்து ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர்.

    அந்த பெண்ணை நேற்று இரவு 8 மணியளவில் சுற்றி வளைத்து கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டோம். அந்த பெண்ணையும் கைது செய்துள்ளோம்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை கடத்தி வரப்பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை கடத்தலில் புதுச்சேரியில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி வந்தவரை தேடி வருகிறோம். குழந்தை கடத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.
    • ர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மீனா. இவர்களது மகன் அருள்முருகன் (வயது 2). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 நாட்கள் தங்கி இருந்து நேற்று சாமி தரிசனம் செய்தனர். இரவு சென்னை திரும்புவதற்காக திருப்பதி மலையில் இருந்து கீழ் திருப்பதிக்கு வந்தனர். அங்குள்ள ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.

    நள்ளிரவு ஆனதால் சென்னைக்கு பஸ்கள் இல்லை. இதனால் சந்திரசேகர், மீனா இருவரும் அவர்களது மகன் அருள் முருகனை அருகில் படுக்க வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் தூங்கினர்.

    நள்ளிரவு மர்மநபர் ஒருவர் தாயின் அருகில் படுத்திருந்த குழந்தை அருள் முருகனை நைசாக தோளில் தூக்கி கடத்திச் சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். அவரும், கணவரும் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர்.

    அங்கிருந்தவர்கள் குழந்தையை ஒருவர் தூக்கிச் சென்றதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதபடி திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

    உடனடியாக திருப்பதி மாநகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    திருப்பதி பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இரவு 2 மணி வரை நான் கண் விழித்திருந்தேன். 2.20 மணிக்கு பார்த்தபோது எனது குழந்தையை காணவில்லை.

    கடவுளே என் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து தந்து விடுங்கள். நான் என் குழந்தை இல்லாமல் ஊருக்கு போக மாட்டேன். பசித்தால் கூட எனது குழந்தைக்கு சொல்லத்தெரியாது. அவன் பசி தாங்க மாட்டான். என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.

    தயவு செய்து அனைவரும் சேர்ந்து என் குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள்" என்றார்.

    போலீசார் உடனடியாக பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து 5 தனிப்படைகளை அமைத்து ஆந்திர போலீசார், குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மர்மநபர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகளை வைத்து தொடர்ந்து கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஏரிபேடு மண்டலம் பகுதியில் குழந்தையுடன் மர்மநபர் சென்றது அந்த பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சிறுவனின் போட்டோவை காண்பித்து விசாரிக்க தொடங்கினர்.

    அப்போது மாதவமலை பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டில் குழந்தை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது குழந்தை அருள் முருகன் ஒரு பெண்ணிடம் இருந்தான். இதனை கண்டதும் போலீசார் பெண்ணை மடக்கி பிடித்தனர். மேலும் சிறுவனை அவரிடம் இருந்து மீட்டனர். குழந்தை கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    விசாரணையில் குழந்தையை மாத மலையை சேர்ந்த சுதாகர் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் சுதாகர் குழந்தையை கடத்திச் சென்று பின்னர் மாதவமலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் குழந்தையை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கண்டதும் அவரது தாயார் ஓடி சென்று கட்டி அணைத்து தூக்கி கதறி அழுதார்.

    அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர்.
    • குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியளவில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் காணாமல் போன 2 குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வதை போல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் காஞ்சிபுரம் நகரத்தில் உளள பல்வேறு தெருக்கள், சந்துகள் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் துரிதமாக அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

    குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன்(60) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருவண்ணாமலை இல்லத்தில் ஒப்படைப்பு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சந்தை மைதானத்தின் அருகே உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த 2-ந் தேதி ஆதரவற்ற நிலையில் 1 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

    அந்த குழந்தை ராணிப்பேட்டை குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள தத்து நிறுவனத்திடம் தற்காலிக பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழந்தையை உரிமம் கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் அறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம் ராணிப்பேட்டை என்ற முகவரியில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ஊசி, பாசி மாலை போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள் தங்கி வருகிறார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு மாத ஆண் குழந்தையுடன் தங்கி இருந்தார்.

    இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையை அருகில் வைத்துவிட்டு தூங்கினார்கள். நள்ளிரவு கண்விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முத்துராஜ் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஆண் ஒருவரும் முத்துராஜின் குழந்தையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரெயில் மூலமாக குழந்தையை கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குழந்தை கடத்தப்பட்டது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் சிறையின் கீழ் ரெயில் நிலையத்தில் ஒரு தம்பதியர், குழந்தையுடன் சந்தேகப்படும்படி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே கேரள போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். குழந்தை மீட்கப்பட்டது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் குழந்தையையும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 48), அவரது மனைவி சாந்தி என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட குழந்தையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு வெகுமதிகளை வழங்கினார்.

    • குழந்தையை கண்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக தூய்மை பணியாளர்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மீட்டு மறைமலைநகரில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மறைமலைநகர் அதியமான் தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது.
    • தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 10-வது பிளாட்பாரத்தில் 2 வயது ஆண் குழந்தை தனியாக நின்று தவித்துக்கொண்டிருந்தது. அந்த குழந்தையின் பெற்றோரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே குழந்தையை ரெயில் நிலைய மேலாளர் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை அணிந்திருந்த உடை, அங்க அடையாளம் பற்றி அறிவிப்பு செய்து பெற்றோரை தேடினார்கள். ஆனால் குழந்தையின் பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.

    இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தையை பேட்டரி காரில் அமர வைத்து ஒவ்வொரு பிளாட்பாரமாக சென்று பெற்றோரை தேடினார்கள். அப்போது 4-வது பிளாட் பாரத்தில் ஒரு குடும்பத்தினர், குழந்தையை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர். பேட்டரி காரில் குழந்தை இருப்பதை பார்த்ததும் அது தங்கள் குழந்தை என்று ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தனர். அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தியபடி தாயிடம் ஓடிச் சென்றது.

    விசாரணையில் குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது. குழந்தையின் பெயர் முகமது இக்ராம் குரோஷி.

    உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 21 பேர் சென்னை வந்துள்ளனர். உறவினரை அனுப்பிவிட்டு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விரைவு ரெயில் மூலம் விஜயவாடா செல்வதற்காக காத்திருந்தபோது குழந்தை மாயமானது தெரியவந்தது. தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    • வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார்.
    • திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

    திருப்பூர்:

    ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

    இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாக கூறி வாங்கி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை. இதனால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன்குமார் பார்த்தபோது அங்கு உமாவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன்குமார் இதுகுறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்தி சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டனர். அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், விழுப்புரத்தில் அந்த எண் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர்கள் தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே குழந்தை கடத்திச் சென்றதாக பெண் ஒருவர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான இரண்டு பெண்களையும் தேடினர்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி விரைந்த தனிப்படை போலீசார், உமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட உமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகிலாவின் குழந்தைகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • ராஜப்பன் ஏன் குழந்தையை தூக்கிச் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலி கரை கண்டார்கோணத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அகிலா (வயது 30).

    இவர் கணவர் கண்ணனுடன் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு அகிலா(6), சஷ்விகா (2) என்ற மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அகிலா குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அகிலாவின் குழந்தைகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் குழந்தை சஷ்விகா திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    குழந்தையை காணாததால் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக தேடத் தொடங்கினர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தக்கலை போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜப்பன் ஆசாரி (70) ஒரு குழந்தையை தூக்கிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது குழந்தை சஷ்விகா அங்கு இருப்பது தெரிய வந்தது.

    குழந்தை மாயமான 4 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜப்பன் ஏன் குழந்தையை தூக்கிச் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

    போலீசார், அவரை கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வரும் ராஜப்பன் நகைக்காக குழந்தையை தூக்கிச் சென்றிருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் வந்தது. அந்த ரெயில் 4-வது நடைமேடையில் நின்றதும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.

    அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பை கேட்பாரற்று கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த கட்டைப்பையில் பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர்.

    குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. பெண்கள் பெட்டியில் பயணம் செய்தபோது யாரோ குழந்தையை கட்டைப்பையில் வைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    பெண் குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றாரா? அல்லது அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் பயணி குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர்.

    குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்பதால் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • கணபதி தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஜோகித் சத்திய வெங்கட் ஆகியோருடன் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்தார்.
    • பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஜோகித் சத்திய வெங்கட் ஆகியோருடன் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்தார்.

    நேற்று மாலை தரிசனம் முடித்து திருப்பதிக்கு வந்த கணபதி தம்பதியினர் தூங்கிக்கொண்டு இருந்த தனது குழந்தையை சென்னை பஸ் நிறுத்தம் இடத்தில் விட்டு விட்டு சென்றனர். பெற்றோர் அருகில் இல்லாததை கண்ட குழந்தை அழத்தொடங்கியது. நீண்ட நேரம் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இதனை கண்ட அங்கிருந்த பஸ் டிரைவர்கள் இதுகுறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்றது பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பஸ் நிலையம் அருகே சுற்றிக்கொண்டிருந்த குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

    குழந்தையை எதற்காக பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்றீர்கள், குழந்தையிடம் ஏதாவது குறைபாடு உள்ளதா என போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×