search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடற்கரையில் கடத்தப்பட்ட குழந்தை காரைக்காலில் மீட்பு: 3 பேர் கைது
    X

    காரைக்காலில் மீட்கப்பட்ட சிறுமி ஜன்னல்யாவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ்

    கடற்கரையில் கடத்தப்பட்ட குழந்தை காரைக்காலில் மீட்பு: 3 பேர் கைது

    • விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள்.
    • கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 26). கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்கிறார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஜன்னல்யா (4) என்ற மகள் உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி, விஜயலட்சுமி ஆகியோர் வழக்கம் போல் கடற்கரை சாலையில் நேரு சிலை அருகே பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து அவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காரைக்காலுக்கு விரைந்தனர். அப்போது குழந்தையை கடத்தி வைத்திருந்த செல்லா (42) என்ற பெண்ணை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    இதுபற்றி காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. அதன்பின் குழந்தையை கடத்தியவர்கள் காரைக்காலுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். உடனே காரைக்கால் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் நள்ளிரவு 1.10 மணிக்கு குழந்தையுடன் இறங்கிய நபர்கள், ஆட்டோ பிடித்து லெமர் வீதிக்கு வந்து ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர்.

    அந்த பெண்ணை நேற்று இரவு 8 மணியளவில் சுற்றி வளைத்து கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டோம். அந்த பெண்ணையும் கைது செய்துள்ளோம்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை கடத்தி வரப்பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை கடத்தலில் புதுச்சேரியில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி வந்தவரை தேடி வருகிறோம். குழந்தை கடத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×