search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child rescue"

    • திருவண்ணாமலை இல்லத்தில் ஒப்படைப்பு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சந்தை மைதானத்தின் அருகே உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த 2-ந் தேதி ஆதரவற்ற நிலையில் 1 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

    அந்த குழந்தை ராணிப்பேட்டை குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள தத்து நிறுவனத்திடம் தற்காலிக பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழந்தையை உரிமம் கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் அறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம் ராணிப்பேட்டை என்ற முகவரியில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார்.
    • திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

    திருப்பூர்:

    ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

    இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாக கூறி வாங்கி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை. இதனால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன்குமார் பார்த்தபோது அங்கு உமாவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன்குமார் இதுகுறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்தி சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டனர். அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், விழுப்புரத்தில் அந்த எண் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர்கள் தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே குழந்தை கடத்திச் சென்றதாக பெண் ஒருவர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான இரண்டு பெண்களையும் தேடினர்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி விரைந்த தனிப்படை போலீசார், உமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட உமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஓசூர் பகுதியில் ரெயிலில் பேனா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • சிறுவர்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஓசூர் பகுதியில் ரெயிலில் பேனா விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்து அதிகாரிகள், சிறுவர்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் 3 சிறுவர்களையும் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள் அந்த 3 சிறுவர்களையும் வேலகவுண்டன்பட்டி அருகே இளநகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களை குழந்தைகள் காப்பக இல்ல நிர்வாகி விஜயகுமார் பராமரித்து வந்தார்.

    இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த அந்த 3 சிறுவர்களும், கடந்த மாதம் 30-ந் தேதி மாலை குழந்தைகள் இல்லத்தில் இருந்து காணாமல் போய்விட்டனர். விஜயகுமார் அவர்களை பல்வேறு பகுதிகளிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணாமல் போன 3 சிறுவர்களையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அந்த 3 சிறுவர்களும் சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று அவர்களை மீட்டு வேலகவுண்டன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தைகள் காப்பக நிர்வாகி விஜயகுமாரிடம் அவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.

    • குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான்.
    • குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் ‌தாதகாப்பட்டி கேட் சவுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணபதி - கங்கா தம்பதி. இவர்களது ஆண் குழந்தை மாறன் (வயது 3). கணபதி, கங்கா இருவரும் தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணபதி முதலில் கடை திறப்பதற்காக சென்றுவிட்டார்.

    தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான். கங்கா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர் குழந்தை வெளியே சென்றதை சரிவர கவனிக்கவில்லை.வழி தவறிய குழந்தை சவுந்தர் நகர் பகுதியில் அழுத படியே சுற்றித் திரிந்தான். அப்பகுதியைச் சேர்ந்த யாருக்கும் குழந்தையை அடையாளம் தெரியவில்லை. இதனிடையே குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

    தாதகாப்பட்டி கேட் உழவர் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி அங்கு அழுதபடி நின்ற குழந்தையிடம் சென்று பேச்சு கொடுத்தார். இதையடுத்து அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்ததில் காய்கறி வியாபாரிகள் கணபதி - கங்கா ஆகியோரின் ‌ குழந்தை தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.பின்னர் குழந்தையை அங்கிருந்து உடனடியாக மீட்டு அவனது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் இந்த துரித செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    தஞ்சை அருகே தாராசுரத்தில் வீட்டு மாடி கிரில் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிய குழந்தையை பொதுமக்கள், பெற்றோர் நீண்டநேரம் போராடி மீட்டனர்.
    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- தஞ்சை முக்கிய சாலையில் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிப்பவர்கள் விஜய்ஆனந்த்- கீர்த்திகா.

    இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹரி பிரியன். இன்று காலை மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் குழந்தை ஹரிபி ரியன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்பு கிரிலில், குழந்தையின் தலை பகுதி சிக்கியது.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதனைப் பார்த்து திடுக்கிட்டனர்.அதில் ஒருவர் அவசர அவசரமாக ஆக்சா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

    இதற்கிடையே குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலக்கி குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்தனர். கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பயந்துபோன குழந்தையை தாய் தூக்கி ஆறுதல் படுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    ×