காப்பகத்தில் மாயமான 3 சிறுவர்கள் மீட்பு

மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஓசூர் பகுதியில் ரெயிலில் பேனா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.சிறுவர்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
காப்பகத்தில் மாயமான 3 சிறுவர்கள் மீட்பு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஓசூர் பகுதியில் ரெயிலில் பேனா விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்து அதிகாரிகள், சிறுவர்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் 3 சிறுவர்களையும் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள் அந்த 3 சிறுவர்களையும் வேலகவுண்டன்பட்டி அருகே இளநகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களை குழந்தைகள் காப்பக இல்ல நிர்வாகி விஜயகுமார் பராமரித்து வந்தார்.

இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த அந்த 3 சிறுவர்களும், கடந்த மாதம் 30-ந் தேதி மாலை குழந்தைகள் இல்லத்தில் இருந்து காணாமல் போய்விட்டனர். விஜயகுமார் அவர்களை பல்வேறு பகுதிகளிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணாமல் போன 3 சிறுவர்களையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த 3 சிறுவர்களும் சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று அவர்களை மீட்டு வேலகவுண்டன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தைகள் காப்பக நிர்வாகி விஜயகுமாரிடம் அவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com