search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார ரெயிலில் பைக்குள் வைத்து பெண் குழந்தையை விட்டுச்சென்ற தாய்
    X

    மின்சார ரெயிலில் பைக்குள் வைத்து பெண் குழந்தையை விட்டுச்சென்ற தாய்

    • மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் வந்தது. அந்த ரெயில் 4-வது நடைமேடையில் நின்றதும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.

    அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பை கேட்பாரற்று கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த கட்டைப்பையில் பார்த்தபோது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர்.

    குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. பெண்கள் பெட்டியில் பயணம் செய்தபோது யாரோ குழந்தையை கட்டைப்பையில் வைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    பெண் குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றாரா? அல்லது அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் பயணி குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மின்சார ரெயிலில் பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டது குறித்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் அனுமதித்தனர்.

    குழந்தை பிறந்து 10 நாட்களே இருக்கும் என்பதால் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×