செய்திகள்
ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Published On 2020-07-06 07:01 GMT   |   Update On 2020-07-06 07:01 GMT
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை:

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த மாணவரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும் என்றும், ஏழை மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

அவரது மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், தற்போதுள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

அதேசமயம் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஜூலை 15-ந்தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News