செய்திகள்
பார்த்தசாரதி

குளித்தலை அருகே ராணுவ வீரர் விபத்தில் பலி

Published On 2020-07-05 10:54 GMT   |   Update On 2020-07-05 10:54 GMT
குளித்தலை அருகே, விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது ராணுவ வீரர் சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). ராணுவ வீரரான இவர், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் கடந்த மாதம் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சொந்தவேலை காரணமாக பக்கத்து ஊரான பனிக்கம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் பார்த்தசாரதி சென்றார்.

அங்கு வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டி- பனிக்கம்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டரின் டிரைவர், திடீரென டிராக்டரை நிறுத்தியதால், பின்னால் வந்த பார்த்தசாரதியின் மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதி, படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பார்த்தசாரதிக்கு சித்ராதேவி என்ற மனைவியும், கமலினி என்ற மகளும், கோகுலேஷ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News