செய்திகள்
தற்கொலை

வானூரில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-07-03 06:42 GMT   |   Update On 2020-07-03 06:42 GMT
வானூரில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மோகன பிரியா (வயது 28). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு மோகனபிரியா கணவர் வீட்டில் மாமனார், மாமியாருடன் சேர்ந்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்ல அவர் விரும்பியதாக தெரிகிறது. தனது விருப்பத்தை கணவரிடம் கடந்த சில மாதங்களாக தெரிவித்து வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இது பற்றி நேற்று முன்தினமும் அவர் கணவரிடம் கூறியுள்ளார். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால், சில மாதங்கள் கழித்து தனிக்குடித்தனம் செல்லலாம் என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை படுக்கை அறையில் இருந்த மோகனபிரியா திடீரென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில் வலி தாங்க முடியாத அவர் அலறி துடித்தார். சத்தம்கேட்டு, பக்கத்து அறையில் இருந்த சிவக்குமார் ஓடி வந்து, மனைவியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். ஆனால் அவர் உடல் கருகி பலியானார். மனைவியை காப்பாற்றும் முயற்சியில் சிவக்குமாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோகன பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் - மனைவி பிரச்சினையில் 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வானூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News