செய்திகள்
கைது

திருப்பூரில் பெண் படுகொலை- கணவர் கைது

Published On 2020-06-30 10:45 GMT   |   Update On 2020-06-30 10:45 GMT
திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் சத்யா நகரை சேர்ந்தவர் அப்துல் சமத்(வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நிஷாபானு(26). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். நிஷாபானு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். அதன்பிறகு அப்துல் சமத்துடன் 2-வது திருமணம் நடந்துள்ளது. அப்துல் சமத் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அப்துல் சமத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நிஷாபானுவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்டு கிடந்த நிஷாபானுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் சமத்தை பிடித்தனர். விசாரணையில், அப்துல் சமத் சொந்தமாக தொழில் செய்வதற்காக, நிஷாபானுவை அவருடைய பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்துல் சமத்தை தெற்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News