செய்திகள்
குடிநீர் பிடித்தபோது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மூதாட்டி பலி
சின்னதாராபுரம் அருகே குடிநீர் பிடித்தபோது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:
சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் லிங்கம்மாள் (வயது 70). லிங்கம்மாள் வீட்டின் முன்பு குடிநீருக்கான பொதுக்குழாய் உள்ளது. இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி பொதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதில் லிங்கம்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த காளியம்மாளுக்கும் (45) தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காளியம்மாள், லிங்கம்மாளை கீழே தள்ளி விட்டதால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து லிங்கம்மாள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் லிங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, காளியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.