செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-06-05 07:44 GMT   |   Update On 2020-06-05 07:44 GMT
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர்:

சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 51 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் கூத்தாநல்லூரை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் சென்னையில் வேலைபார்த்து வருகின்றனர். கடந்த 2 நாட்கள் முன்பு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் கணவன்-மனைவி 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் மன்னார்குடி பகுதி 49 வயதை சேர்ந்த ஒருவரும், 31 வயதை சேர்ந்த ஒருவரும் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கணவன்-மனைவி உள்பட 4 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Tags:    

Similar News