செய்திகள்
தொழிலாளி கொலை

ராஜபாளையம் அருகே மில் தொழிலாளி வெட்டிக்கொலை

Published On 2020-06-05 07:10 GMT   |   Update On 2020-06-05 07:10 GMT
ராஜபாளையம் அருகே மில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாஞ்சோலை காலனியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது28), மில் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணிக்கு ஊருக்கு வெளியில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு இசக்கிமுத்து சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காட்டுப் பகுதியில் இசக்கிமுத்து பிணமாக கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துக் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இசக்கிமுத்து உடலில் ஏராளமான அரிவாள் வெட்டு காணப்பட்டது. எனவே அவரை கும்பலாக சேர்ந்து சிலர் வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக இசக்கிமுத்து உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரை வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News