திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி காய்கறி வியாபாரி பலி
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் பொய்கைநல்லூரை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக திருவையாறு அடுத்த அகிலாண்டபுரத்தில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று குமார் அகிலாண்டபுரத்தில் இருந்து திருவையாறுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயமடைந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சாலியமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீநாத்தும் (25) காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். ஸ்ரீநாத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.