செய்திகள்
அரிவாள் வெட்டு

நிலக்கோட்டை அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2020-05-22 09:23 GMT   |   Update On 2020-05-22 09:23 GMT
நிலக்கோட்டை அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஸ்குமார் (வயது 21). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான பால்பாண்டி (25), கன்னியப்பன் (26), மருது (25) ஆகியோருடன் மோட்டார் சைக்கிள்களில் கொங்கபட்டிக்கு வந்தனர்.

போதையில் இருந்த அவர்கள் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்பவர் சத்தம் போடவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதை பார்த்த அப்பகுதியினர் குடிபோதையில் சத்தம் போட்டவர்களை பிடிக்க முயன்றனர்.

சதீஸ்குமார் மட்டும் சிக்கிக் கொள்ள மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து சதீஸ்குமாரை அவர்கள் சத்தம் போட்டு போலீசில் ஒப்படைக்கவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின் சதீஸ்குமார் தனது உறவினர்களான ராஜா (39), மூர்த்தி (34), ஆசைத்தம்பி (30), ரவி (33), கண்ணன் (38), பால்பாண்டி (30), பார்த்திபன் (35) உள்ளிட்டோர் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

அப்போது கொங்கபட்டியைச் சேர்ந்த தினகரன் (27), முத்துச்சாமி (30), அருள் (25) ஆகிய 3 பேரையும் ஆயுதங்களால் தாக்கினர். படுகாயமடைந்த அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் மேலும் பரவாமல் தடுக்க நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கொங்கபட்டியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News