செய்திகள்
நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் முக கவசம் அணியாத 200 பேருக்கு தலா ரூ.100 அபராதம்
பொதுமக்கள், வியாபாரிகள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடரும் என பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் எச்சரித்துள்ளார்.
செங்குன்றம்:
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது காலை முதல் மாலை வரை அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தனித்தனியாக உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இவ்வாறு முக கவசம் அணியாத வியாபாரிகள், பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் என 200 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடரும் என பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் எச்சரித்துள்ளார்.