செய்திகள்
அம்மா உணவகம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் காலம் நீட்டிப்பு

Published On 2020-05-19 08:01 GMT   |   Update On 2020-05-19 08:01 GMT
ஊரடங்கு முடியும் வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் ஏழை, எளியோருக்கு வயிறார உணவு கொடுக்கும் தளமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட சமயத்தில் அம்மா உணவகம் மூலம் அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்களும் இலவசமாக உணவளிக்க முன்வந்தனர். நிதி உதவியும் குவிந்தன.

இதையடுத்து அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்றும், அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து வசூலித்து வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று முதல் கட்டணம் வசூலித்து தான் உணவு வழங்க வேண்டும் என்று அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்பட்டு நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கியது. நிலைமை சீரடையும் வரையிலோ அல்லது இந்த மாதம் முடியும் வரையிலோ இலவச உணவு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News