செய்திகள்
பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது
பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில் எஸ்.பி.பி. காலனி பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த கருப்புசாமி (வயது 27), பள்ளிபாளையம் ஒட்டமெத்தையை சேர்ந்த மகேஷ் (25), உதயகுமார் (24) என்பதும், அவர்கள் கடந்த 4 மாதங்களாக எஸ்.பி.பி. அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் 1 பவுன், ரூ.5 ஆயிரம், தாஜ்நகரில் ஒரு ஆசிரியர் வீட்டில் 4 பவுன், அக்ரஹாரம் பகுதியில் சையத் காசீம் (50) என்பவரது வீட்டில் 5 பவுன் நகைகளை திருடியதும், தற்போது தாஜ்நகரில் திருட நோட்டம் போட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அவர்களை திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.