செய்திகள்
தொழில் கூட்டமைப்பினருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு சில தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்கள் செயல்படலாம்? பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பாக தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கருத்து கேட்கிறார். தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளனர். தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று தொழில்துறையினரிடம் கருத்து கேட்பது குறிப்பிடத்தக்கது.