search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் நிறுவனங்கள்"

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பல்லடம் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த செப்டம்பர் 7-ந் தேதி பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட போராட்டமாக செப்டம்பர் 11 முதல் 24-ந்தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம், இ-மெயில், அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இன்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தும் தொழிற்சாலைகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றும் போராட்டமும் நடைபெறுகிறது. மேலும் கடந்த காலங்களில் கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் 170-க்கும் அதிகமான சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன. முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு சிறு தொழில் நிறுவனங்களும் மின் கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும்
    • சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடனான சந்திப்பின்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழ்நாட் டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    இதை செயல்படுத்தும் விதமாக தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 207 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதன் மூலம் ரூ.13 ஆயிரத்து 726 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்காக வெளிநாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைக்கவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 9 நாள் அரசு முறை பயணமாக நாளை வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.

    சென்னையில் இருந்து நாளை காலை 11.30 மணிக்கு புறப்படும் அவர் முதலில் சிங்கப்பூர் செல்கிறார். நாளையும் (23-ந் தேதி) நாளை மறுநாளும் (24-ந் தேதி) சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 24-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடனான இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக சிங்கப்பூர் தொழில் நிறுவன கூட்டமைப்பு தலைவர் நெய்ல் பரேக் தெரிவித்துள்ளார்.

    முதல்-அமைச்சரின் சிங்கப்பூர் பயணத்தை கவனிப்பதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்றே சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

    சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு 25-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்ற பிறகு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.

    • சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பாற்றிய தொழில் நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் பாராட்டத்தக்க வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த, தலை சிறந்த தொழில் மற்றும் வணிக நிறுவனத்திற்கு, விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என சட்ட சபையில் 2022-23-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட–ப்பட்டது.

    அனைத்து தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவை பொதுத்துறை, தனியார், கூட்டுத் துறை நிறுவனங்களாக இருந்தாலும் இந்த விருது பெற தகுதி உடையவை ஆகும். இந்த நிறுவனங்கள், பங்கு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம்.

    தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புகளும் இந்த விருதுக்கு பெறத் தகுதி உடையவை ஆகும். மேற்கண்ட நிறுவனங்கள் நேரடியாகவோ, அறக்கட்டளைகள் மூலமாகவோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ, இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.

    தனித்துவமாக அறக்கட்டளைகள், தொண்டு நிறுவ–னங்கள் மற்றும் மன்றங்கள்,சங்கங்கள் இந்த விருது பெறத் தகுதியற்றவை ஆகும். ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்க எடுத்துக் கொள்ளப்படும்.

    விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

    மேலும் பல்வேறு சமூகநல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    தகுதியு டைய நிறுவனங்கள் அரசின் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.இருப்பினும், சில ஊராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக்கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×