search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    9 நாட்கள் வெளிநாட்டு பயணம்.. 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை: நாளை சிங்கப்பூர் புறப்படுகிறார் மு.க.ஸ்டாலின்
    X

    9 நாட்கள் வெளிநாட்டு பயணம்.. 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை: நாளை சிங்கப்பூர் புறப்படுகிறார் மு.க.ஸ்டாலின்

    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும்
    • சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடனான சந்திப்பின்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழ்நாட் டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    இதை செயல்படுத்தும் விதமாக தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 207 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதன் மூலம் ரூ.13 ஆயிரத்து 726 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்காக வெளிநாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைக்கவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 9 நாள் அரசு முறை பயணமாக நாளை வெளிநாடுகளுக்கு புறப்படுகிறார்.

    சென்னையில் இருந்து நாளை காலை 11.30 மணிக்கு புறப்படும் அவர் முதலில் சிங்கப்பூர் செல்கிறார். நாளையும் (23-ந் தேதி) நாளை மறுநாளும் (24-ந் தேதி) சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 24-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடனான இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக சிங்கப்பூர் தொழில் நிறுவன கூட்டமைப்பு தலைவர் நெய்ல் பரேக் தெரிவித்துள்ளார்.

    முதல்-அமைச்சரின் சிங்கப்பூர் பயணத்தை கவனிப்பதற்காக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்றே சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

    சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு 25-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்ற பிறகு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.

    Next Story
    ×