செய்திகள்
தற்கொலை

மாதிரி ‘நீட்’ தேர்வு- மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

Published On 2020-05-07 14:23 GMT   |   Update On 2020-05-07 14:23 GMT
ஆன்லைனில் நடத்தப்பட்ட மாதிரி ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
குஜிலியம்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ராணி மெய்யம்மை நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவர், கரிக்காலியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சிவகாமிசுந்தரி. இவர் கரூரில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு நரேந்திரன் என்ற மகனும், சாய்பாலா (20) என்ற மகளும் உள்ளனர். சாய்பாலா ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக, சென்னையில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்தநிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சாய்பாலா கரிக்காலியில் உள்ள தனது வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் வந்தார்.

பின்னர் வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையம் சார்பாக ஆன்லைனில் மாதிரி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சாய்பாலா குறைவான மதிப்பெண் பெற்றார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சாய்பாலா மனமுடைந்த நிலையிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அவரது பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வீட்டுக்கு வந்த வேல்முருகன் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாய்பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.




Tags:    

Similar News