ஊரடங்கு உத்தரவால் தேன்கனிக்கோட்டையில் மளிகை கடைகள் 11 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி
தேன்கனிக்கோட்டை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி விட்டனர்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் காலை முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அந்த நேரங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் மளிகை கடைக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் இன்று முதல் தேன்கனிக்கோட்டை பகுதியில் காலை 11 மணி வரை மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதனையும் மீறி கூடுதல் நேரம் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் மக்கள் இன்று அதிகாலையிலேயே பொருட்கள் வாங்குவதற்கு மளிகை கடைகளில் குவிந்தனர். இதனால் பொருட்கள் வழங்க முடியாமல் கடைக்காரர்கள் திணறினர். மேலும் போலீசார் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என கண்காணித்தும் வருகின்றனர்.