அதிக விலைக்கு உரங்களை விற்கும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை
சுவாமிமலை:
அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலெட்சுமி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கோடை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் நெல், உளுந்து, பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் விற்கப்படும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் டி.ஏ.பி. யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட இருப்பில் உள்ள உரங்களை பற்றிய விபர பட்டியல் வெளியே விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். இந்த உரங்களை கூடுதல் விலைக்கு விற்பது, விவசாயிகளிடம் இருப்பில் உள்ள மற்ற உரங்களையும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை செய்து விற்றால் அவர்கள் மீது உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் விவசாயிகள் வாங்கும் அனைத்து உரங்களுக்கும் உரிய ரசீது அளிக்க வேண்டும்.
விவசாயிகள் உரம் தெளிக்கும்போது கையுறை கொண்டும், தேவையான பாதுகாப்பு உபகரங்களை பயன்படுத்த வேண்டும். வேளாண்மை பணிகளின் போது தேவையான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.