செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-04-21 10:00 GMT   |   Update On 2020-04-21 10:00 GMT
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரானோ பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயை கட்டுப்படுத்த ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டும் இதுவரை ரூ.2 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்கள் வந்துள்ளன.

கொரோனா அறிகுறியுள்ளவர்களை பரிசோதிக்கும் ரேபிட் கிட் கருவிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளன. அதனை கொண்டு நாகர்கோவில் பகுதியில் சுகாதார பணியாளர்கள் பரிசோதனையை தொடங்கி உள்ளனர்.

குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது தவிர நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவர்களை தவிர ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியின் வெளிநோயாளிகள் பிரிவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு வருகிறார்கள். இவ்வாறு வருகிறவர்களில் இதுவரை 1200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ரத்த பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இன்று பிற்பகல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசாருக்கான ரத்த பரிசோதனை நடைபெறும் என்று தெரிகிறது.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது வரை 16 நோயாளிகளே உள்ளனர். இவர்களில் சிகிச்சை முடிந்தவர்களுக்கு மீண்டும் ரத்த பரிசோதனை நடைபெற்றது. இதில் ஏற்கனவே ஒருவருக்கு நோய் பாதிப்பு நீங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பாட்டிக்கு இன்னும் நோய் பாதிப்பு குறையாததால் அவர் கொரோனா வார்டிலேயே தங்கி இருந்து பாட்டியை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இன்னொரு நோயாளிக்கும் நேற்று நடந்த பரிசோதனையில் நோய் குணமாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவரும் இன்று அல்லது நாளை தனி வார்டில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. இவர்கள் இருவரும் அனுப்பப்பட்டால் குமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 16-ல் இருந்து 14 ஆக குறைந்து விடும்.


Tags:    

Similar News