செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-04-13 03:45 GMT   |   Update On 2020-04-13 03:45 GMT
கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை உணர்ந்து தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்கள் பலருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியாமல் இருக்கக்கூடும். வைரஸ் பாதித்திருப்பது அவர்களுக்கே தெரியாது என்பதால், அவர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடும். அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பதால் தான் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அனைவரும் முககவசம் அணியும் பட்சத்தில், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து தடுக்கப்படும்.

டெல்லி, மராட்டியம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் முக கவசம் அணியாமல் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்திலும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும். முககவசத்திற்கு பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வீட்டில் துணியால் தயாரிக்கப்பட்ட முககவசத்தை கூட அணியலாம். இம்மாத இறுதியில் கொரோனா பதற்றம் தணிந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கூட அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் முக கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News