செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

Published On 2020-04-03 02:48 GMT   |   Update On 2020-04-03 02:48 GMT
காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.
கயத்தாறு:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தூத்துக் குடி மாவட்டம் கயத்தாறு பஸ் நிலைய வளாகம் நேற்று வாரச்சந்தையாக செயல்பட்டது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப் படுத்த அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுவதுடன், இந்த மாதத்துக்கான (ஏப்ரல்) அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்து 52 கிராமங்களும், 500-க்கும் மேற்பட்ட நகர பஞ்சாயத்துகளும், 124 நகராட்சிகளும், 12 மாநகராட்சிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி வருகிறோம்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், திரைப்பட வர்த்தக சபை, பெப்சி போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிவாரண நிதி திரட்டி வருகின்றனர். கலை உலகைச் சேர்ந்தவர்கள், எப்போதும் யார் பாதிக்கப்பட்டாலும் முதல் ஆளாக உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.

தற்போது அவசரகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மட்டும் செய்து வருகிறோம். அனைத்தும் சகஜ நிலைக்கு வந்த பின்னர் திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிப்போம்.

காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வினியோகம் செய்வதற்கு அறிவுறுத்தி வருகிறோம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அரசு வேடிக்கை பார்க்காது. காய்கறி, மளிகை பொருட்களை பதுக்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News