செய்திகள்
தமிழக சிறைகளில் முக கவசம் தயாரிக்கும் பணியில் கைதிகள் தீவிரம்
தமிழக சிறைகளில் முக கவசம் தயாரிக்கும் பணியில் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக சிறைகளில் முக கவசம் தயாரிக்கும் பணியில் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சிறைத்துறை இயக்குனர் சுனில்குமார்சிங் கூறியதாவது:-
கொரோனா என்ற கொடிய நோய் பரவாமல் தடுக்க அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் இருக்கும் தண்டனை கைதிகளை முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். கடந்த 10 நாட்களாக சுமார் ஒன்றரை லட்சம் முக கவசம் தயாரித்து போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகளில் பணியாற்றுவோர் பயன்படுத்த சப்ளை செய்துள்ளோம். ஒரு முக கவசம் ரூ.10-க்கு விற்பனை செய்கிறோம்.
அதிகபட்சமாக கோவை சிறையில் ஒரு நாளைக்கு 7,950 முக கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. சென்னை புழல் சிறையில் அடுத்த கட்டமாக தினமும் 7,800 முக கவசங்கள் தயாராகிறது. பொதுமக்களுக்கு இதுவரை முக கவசங்கள் விற்கவில்லை. தேவைப்பட்டால், சிறை பஜார் மூலம் பொதுமக்களுக்கும் குறைந்த விலைக்கு முக கவசங்கள் விற்பனை செய்வோம்.
கொரோனா பரவும் அபாயத்தை தடுக்கும் விதமாக, தமிழக சிறைகளில் இருந்து விசாரணை கைதிகள் 3,900 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுதலை செய்யப்படும் கைதிகளை, அவர்களது வீடுகளுக்கு நேரடியாக போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.