செய்திகள்
ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும்- அமைச்சர் காமராஜ்
கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும் என அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார்.
சென்னை:
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உதவித்தொகையாக அரிசி வாங்குகிற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், அந்த ரேஷன் கார்டிற்கு தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார்.
இந்த நிவாரண தொகையை ஸ்மார்ட் கார்டு மூலம் அனைவருக்கும் நாளை (வியாழக்கிழமை) முதல் ரொக்கமாக வழங்கப்படும். இதில் பெயர் உள்ளவர்கள் யாராவது சென்று வாங்கி கொள்ளலாம். அந்த அட்டை இல்லாத இனங்களில் அவர்களின் கார்டில் பெயர் உள்ள நபர்களின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு ஒரு முறை மட்டும் வருகின்ற கடவு சொல் அடிப்படையிலோ உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த தொகை ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. எந்த பகுதிக்கு எப்போது வழங்கப்படும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீடுகளுக்கே வரும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.