சங்கரன்கோவில் அருகே கூடுதல் விலைக்கு மது விற்ற தொழிலாளி கைது
சங்கரன்கோவில்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு பாரில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தொழிலாளியான ஆனந்த் (வயது 37) என்பதும், இவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 278 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.