களக்காடு அருகே தொழிலாளி-காவலாளி மீது தாக்குதல்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 65). கூலி தொழிலாளி. இவர் ஆர்ச்விளை தெருவை சேர்ந்த திரவியராஜ் என்பவருக்கு ரூ.400 கடனாக கொடுத்திருந்தார்.
அதனை திரவியராஜ் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சம்பவத்தன்று பொன்னுத்துரை, திரவியராஜிடம் சென்று பணத்தை திருப்பி கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திரவியராஜ், பொன்னுத்துரையை கம்பால் தாக்கினார். மேலும் இனிமேல் பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த தாக்குதலினால் காயம் அடைந்த பொன்னுத்துரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திரவியராஜை தேடி வருகின்றனர்.
நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி போலீஸ் சரகம் முத்துவீரப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது47). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சங்கரன் மகன் முத்துகிருஷ்ணன் என்பவர் ஊரின் பெயர் பலகையில் முத்துவீரப்பபுரம் என்று எழுதப்பட்டிருந்ததை அழகு முத்துவீரப்பபுரம் என்று மாற்றி எழுதியுள்ளார்.
இதைப்பார்த்த நடராஜன் அவரை கண்டித்துள்ளார். ஊர் பெயரை மாற்றக்கூடாது எனவே மீண்டும் அதனை அழித்து விட்டு முத்துவீரப்பபுரம் என்று எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜன் தனது வீட்டு முன்பு நின்ற போது, முத்துகிருஷ்ணன் அவரை கன்னத்தில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.