கோவையில் வெவ்வேறு விபத்தில் காவலாளி உள்பட 2 பேர் பலி
கோவை:
கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரொசரியா ராபர்ட் (வயது 30). மருந்து விற்பனை பிரதிநிதி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற சைக்கிள் மீது மோதி தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டி பளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (54). இவர் கோவை எஸ்.எஸ்.குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த தண்ணீர் லாரி வெளியே செல்வதற்காக கேட்டை திறந்தார். அப்போது அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெங்கடாசலம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.