செய்திகள்
கொலை

காரியாபட்டி அருகே ஜாமீனில் வந்த விவசாயி ஓடஓட விரட்டி கொலை

Published On 2020-03-16 10:00 GMT   |   Update On 2020-03-16 10:00 GMT
காரியாபட்டி அருகே பழிக்கு பழியாக ஜாமீனில் வந்த விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் அக்னிராஜ் (வயது31), விவசாயி.

இதே ஊரைச் சேர்ந்தவர் கந்தவேல். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னிராஜ் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், ஊருக்கு வராமல் வெளியூர்களில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்னிராஜ் மாந்தோப்பு கிராமத்திற்கு வந்தார்.

இன்று காலை ஊருக்கு வெளியே உள்ள பாலத்தில் அவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 5 பேர் கும்பல் வந்தது. அவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். கும்பலை பார்த்ததும் அக்னிராஜ் தப்பிச்செல்ல முயன்றார்.

ஆனால் மர்ம கும்பல் அவரை தாக்கியது. இருப்பினும் அக்னிராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். கொலை கும்பல் அவரை துரத்தி ஓடஓட விரட்டி வெட்டியது.

பலத்த காயம் அடைந்த அக்னிராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை தொடர்ந்து கொலை கும்பல் தப்பி ஓடியது. சினிமாபோல் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிருக்கு போராடிய அக்னிராஜை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதனை தொடர்ந்து அக்னிராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News