செய்திகள்
கொரோனா அச்சம்... டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘கொரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் சென்னையில் இடைவிடாமல் தண்ணீர் வினியோகம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கும் போதுமான அளவுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை. அவர்கள் கைகழுவ பள்ளிகளில் தண்ணீருடன் சோப் அல்லது கைகழுவும் திரவம் இலவசமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடும்படி கூறியுள்ளார்.
சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகம் செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.