திண்டுக்கல் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்- போலீசார் விசாரணை
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அனுமந்த நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கோபிநாத் (வயது 20). சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு சம்பளம் வாங்கி வருவதாக தனது தாய் ராஜம்மாளிடம் கூறிச் சென்றார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது செல்போனுக்கு அழைத்தனர்.
அப்போது தான் வீட்டுக்கு வந்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இன்று காலை அனுமந்த நகர் மேம்பாலத்தின் அடியில் உள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோபிநாத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.